மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


விடுதலைப்போரில் பெண்கள் – 25



தேசம் போற்றிக் கொண்டாடுகின்ற முதல் இந்திய விடுதலை போரின் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது  1757 ஆம் ஆண்டிலேயே  ஆங்கிலேயரை எதிர்த்து வீரசமர் புரிந்தவர் சிராஜ் – உத்- தெளலா என்கிற இஸ்லாமி மன்னர்தான். அதுபோலவே ஒரு இஸ்லாமிய பெண்ணும் முதல் விடுதலை போருக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து களமாடி உள்ளார். அவர் கண்ணனூர் ராணி பீபி கேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாய் விளங்கிய மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளராக கேரளத்தில் தாய்மண்ணை நேசித்தவர் இவர்.
இந்தியர்களை அடக்கியாளும், இந்திய வளங்களை சூரையாடும்  ஆங்கிலேயர்களின் படை வீரர்கள் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர். 1783 ஆம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். நவீன ஆயுதங்களோடு நடத்தப்பட்ட  திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கியேலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன் ராணியின் எல்லைப்பகுதியை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்பந்தம் வாங்கி ஆங்கிலேயர் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக் கொண்டனர். ராணி விடுதலை செய்யப்பட்டார். 
1784 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கியேலயரின் முகாம் செயல்படத்தொடங்கியது. மீண்டும் 1790 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து கையெழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் முதல் முறை ஏமாற்றப்பட்ட ராணி பீபி இதை மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதராவாக செயல்பட போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார். மீண்டு வரமுடியாத சூழலில் மறைந்தார் இவர்.
1857 ஆம் ஆண்டிலும் நடந்த முதல் விடுதலைப் போரில் அயோத்தியின் அடையாளமாய் மாறிப் போன ஹஜ்ரத் மஹல் வாரிசுகளாக விடுதலை அடையும்வரை போராடிய இஸ்லாமிய பெண்கள் குறித்த தகவல்கள் அறிதாகவே கிடைக்கிறது. பேகம் ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸி ராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய வீரம் மிக்கவர் மஹ்பர், 1858 ஜுன் 18 – இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.
திண்டுக்கல் மாவட்த்தில் உள்ள பேகம்பூருக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது நிறைமாத கர்பினியாக ஆங்கிலேயரை எதிர்த்து போர்களத்தில் நின்ற ஹைதர் அலியின் சகோதரி பேகம் சாஹிபா  வாழ்ந்த மண் என்பதுதான். பேகம் சாஹிபா என்ற அந்த ஊர், அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி, அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். கி.பி.1772 குழந்தை பிறந்து ஏழாம் நாள் காலமானார் சாஹியா.  மீறா றசாலிக்கான் சாயபு போராளியான தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னபள்ளபட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது குடும்பங்களுக்கு  நிலங்களை கொடுத்து பள்ளிவாசல் பணிகளை கவனிக்க ஏற்பாடு செய்தார்.
“ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்து விடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்என டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது  ஆங்கில பெண் ஆல்ட்வெல் கூறியதை சாவர்க்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அத்துனை தேசபக்தி இஸ்லாமிய தாய்மார்களுக்கு.
1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 அன்று பஞ்சாப் ஜாலியன் வாலாபாக்  மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கொடூரன் ஜென்ரல் டயர் நட்த்திய துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தவர்  உமர் பீபி. இவர் 1864 ஆம் ஆண்டு அமிதசரசில் பிறந்தவர். தொடர்ந்து பல்வேறு தேசவிடுதலை இயக்கங்களில் பங்கு கொண்டவர்.  இவரின் கணவர் இமாமுதீன் இவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.  இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த நூற்றுக்கனக்கானோரில் முக்கியமானவர் இவர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டாலும் விபரங்கள் மிக்க்குறைவே.
என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன் என்று வீரமுழக்கமிட்டவர் தாயார் பீபியம்மாள். 1922 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்ட இளையான்குடி இப்ராகிம் ஷாவுடைய பங்களாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெருவரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார்
இதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆக்ரோஷ்மாக உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். தினமும் பயணங்கள் கூட்டங்கள் கலந்துரையாடல்கள் என இயங்கிக்கொண்டிருந்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது உடல் கதர் துணியால் சுற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர் மட்டுமல்ல திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரியில் நடந்த  கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்ட்தால் கடலூர் சிறையில் ஆறுமாதம் அடைக்கப்படார்.
அதேபோல் 1937 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்ட மேலேவை உறுப்பினராகவும், 1969 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேச அமைச்சராக பதவி வகித்த பேகம் அயிஜாஸ் ரசூல் ஒரு மகத்தான விடுதலைப் போராட்ட வீராங்கனையாவார்.
மேலும் கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சிறை சென்றார். இஸ்லாமியரளை கொச்சைப்படுத்தும் காவி பயங்கரவாதத்திற்கு எதிராய் இவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியுள்ளது.
இதைவிட உற்சாகமான செய்தி உண்டு. 1938 ல் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் ஜின்னாவும் சந்தித்து பேசியபோது ஜின்னாவைச் சந்திக்க வந்த ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது “என்னிடம் உண்மை நிறைந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள் என்று சொல்லி தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம். விடுதலைக்கு மட்டுமல்ல மக்கள் ஒற்றுமைக்கும் உழைத்தவர்கள் இஸ்லாமிய பெண்கள்.
“என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றனஎன காந்தியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள் தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு  அளித்து,  இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது என்ற தகவலும் உண்டு.
உதவிய  நூல்கள்: 1.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும் மறைக்கப்படும் உண்மைகளும். 2.விடுதலை போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை. 3.மறுக்கப்பட்ட உண்மைகளும்..மறைக்கப்பட்ட நியாயங்களும், அனிஸ்தீன், அகமதுநிஸ்மா பதிப்பகம், சென்னை. 4. B.L. Grover, S. Grover, A New Look At Modern Indian History 5. தினமணி,29.04.1938.மறுபிரசுரம்:29.04.1977
(தொடரும்)
-       எஸ்.ஜி.ரமேஷ்பாபு


0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark